மகாத்மா காந்தியின் வாழ்க்கைக் குறிப்பு - அரிய படங்களுடன்
 
பாகம்: 11
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0


இந்திய தேசிய ராணுவ அதிகாரிகள் சிலர் அவரைப் பேட்டி காண வந்தனர். நேத்தாஜி போஸ் காட்டிய வழியில் வகுப்பு ஒன்றுமைக்குப் பாடுபடவேண்டும் என்றும் நிர்மாண வேலைகளில் ஈடுபட வேண்டும் என்றும் அவர்களுக்கு காந்தி போதித்தார்.
1945 மே மாதத்தில் ஐரோப்பாவில் யுத்தம் முடிந்தது. அரசியல் உடன்பாடு காண்பதற்காக அடுத்த மாதத்தில் காந்தியை வைஸ்ராய் பேச்சுக்கு அழைத்தார்; ஒரு மாத காலம் சம்பாஷணை நடந்தது. வெகுஜனப் பிரார்த்தனைக் கூட்டம் நடத்தும் வழக்கதை அப்போது காந்தி ஆரம்பித்தார். எல்லோரும் தாளம் பிசகாமல் 'ராம்துன்' பாடவேண்டும் என்பது அவரது கண்டிப்பான கட்டளை. அஹிம்சை, கட்டுப்பாடு உணர்ச்சிகளை ஊட்டும் சாதனமாக இதை அவர் கருதினார். பிரிட்டிஷார் ஆட்சிப் பொறுப்பைக் கைவிடும் காலம் வரும் என்றும், மக்கள் கட்டுப்பாடுடன் இராவிடில் ஆட்சியை ஏற்கத் தெரியாமல் விழிக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
பஞ்சத்தில் 50 லட்சம் பேரைப் பலி கொடுத்த வங்காளத்துக்கு ஆறுதல் கூறப் போகவேண்டும் என்று காந்தி தாம் விடுதலையான நாள் முதல் ஆவல் கொண்டிருந்தார். அவரது அசௌக்கியம் காரணமாக 1945 நவம்பரில்தான் கல்கத்தாவுக்கு விஜயம் செய்ய முடிந்தது. டிசம்பரில் வங்காளக் கவர்னரை அவர் பலமுறை சந்தித்து அரசியல் நிலைமை பற்றியும், காவல் கைதிகளின் விடுதலை சம்பந்தமாகவும் விவாதித்தார்.

டம்டம் சிறையில் காவல் கைதிகளையும் அவர் கண்டு பேசினார். எல்லாக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் அவரை இரட்சகராகக் கருதினர். கைதிகள் விடுதலைப் பிரச்னை பற்றி அவரை கேட்டபோது, "தேசபக்தர்களுக்குச் சுதந்திர மாளிகையின் ஆசார வாசல்தான் சிறைச்சாலைகள். அடிமை இந்தியாவே ஒரு பிரம்மாண்டமான சிறைதானே!" என்று பதிலளித்தார் காந்தி.

கல்கத்தாவில் டிசம்பரில் காரியக் கமிட்டிக் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்துக்குப்பின், காந்தி, சாந்திநிகேதனுக்குச் சென்றார். குருதேவர் டாகூரை இழந்து அந்நிலையம் தவித்துக் கொண்டிருந்தது. விசுவ பாரதியின் நிலைமை சம்பந்தமாக நிர்வாகிகளுடன் காந்தி விவாதித்தார். வேதனைப் படும் உலகத்துக்குச் சாந்தியை அளித்தவர் குருதேவர் என்று அவர் குறிப்பிட்டார். "தமது கீதங்களால் மாத்திரமற்றி, பேனாவாலும், தூரிகையாலும் கூட அவர் இந்தியாவுக்கு உலகெங்கும் புகழ் தேடித்தந்தார். கதகதப்பான இறக்கைகளால் காத்து இரட்சிக்கும் தாய்ப் பறவையை இழந்துவிட்டோம்" என்று அவர் கூறினார்.
1942 ஆகஸ்ட் போராட்டத்தில் வீரம் விளைத்து நின்ற மிதுனபுரிக்குக் காந்தி பின்னர் சென்றார். அங்கிருந்து 1946 ஜனவரியில் அஸ்ஸாமுக்குச் சென்று ஒரு வராம் தங்கினார். அஸ்ஸாம் கூட்டங்களில் எல்லாம் நிர்மாணத் திட்டத்தின் முக்கியத்துவத்தையே அவர் வற்புறுத்தினார். 25 லட்ச ரூபாய் முதல் போட்டால் ஐந்தரைக் கோடி ரூபாய் வருமானம் அளிக்கக்கூடிய திட்டம் இது என்று அவர் சுட்டிக் காட்டினார். "இந்தியா நிர்வாணமாக இருக்கிறது. ஆடை உடுத்தி இதை மறைக்க வேண்டும். இதற்குச் சர்க்காவை விடச் சிறந்த சாதனம் ஒன்றை யாராவது காட்டினால் கைராட்டையை இன்றே கை கழுவ நான் தயார்" என்றார் காந்தி.
நிர்மாண ஊழியர்கள் மகாநாட்டை ஆரம்பித்து வைக்கவும், வேறு பல முக்கிய அலுவல்களைக் கவனிப்பதற்காகவும் காந்தி அஸ்ஸாமிலிருந்து சென்னைக்குப் புறப்பட்டார். ரயிலில் அவருக்காக ஒரு தனிப் பெட்டி சேர்க்கப்பட்டது. பொது ஜனங்களுக்குக் காந்தி தரிசனம் அளித்துப் பெசுவற்காக அதில் ஒரு மேடையை அமைத்து ஒலி பெருக்கியையும் பொருத்தியிருந்தனர். மதுரை மீனாக்ஷி கோவிலுக்குச் சென்று அவர் தரிசித்தார். ஹரிஜனப் பிரவேசத்துக்குப் பிறகு அவ்வாலயத்துக்கு அவர் சென்றது அதுவே முதல் தடவை. மதுரையில் ஐந்து லட்சம் மக்கள் காந்தியைத் தரிசிக்கக் கூடினர்.

1946 மார்ச் மாதம் பம்பாயில் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் காந்தி கலந்து கொண்டார். இந்திய கடற்படையினர் கலகம், உணவுக் கஷ்டம் முதலிய பிரச்னைகளை அக்கூட்டம் ஆராய்ந்தது.
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
 
Website Designed by Gandhi Iyakkam, Thanjavur