மகாத்மா காந்தியின் வாழ்க்கைக் குறிப்பு - அரிய படங்களுடன்
 
பாகம்: 13
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0

 

கல்கத்தா மார்க்கமாக நவகாளிக்குச் செல்லவேண்டும் என்று அக்டோபர் மாதத்தில் காந்தி தீர்மானித்தார். தேக பலவீனத்தையும் பிரயாணக் கஷ்டத்தையும் நிலைமையின் சிக்கலையும் அவர் பொருட்படுத்தவில்லை. "இருள் சூழ்ந்த இரவு, வீட்டிலிருந்து வெகு தூரம் வந்து விட்டேன்; கடவுளே நீர்தான் வழிகாட்ட வேண்டும்' என்ற (ஆங்கில) பாசுரத்தை முழு உண்மையுடன் நான் இப்போது பாட முடியும்" என்று அவர் குறிப்பிட்டார்.

நவம்பர் மாதத்தில் நவகாளிக்குக் காந்தி போய்ச் சேர்ந்தார். கஷ்டநஷ்டம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறி தைரியம் ஊட்டுவதற்காக அவர் கால்நடையாக, கிராமம் கிராமமாக யாத்திரை சென்றார். சென்ற இடம் எல்லாம், பயங்கர நாசக் காட்சிகளைக் கண்டார். அவர் நெஞ்சம் நெக்கு நெக்காய் உருகியது. கிராமவாசிகளின் மண் குடில்களில் தங்கினார். ஒறறையடிப் பாதைகளிலும், வயல் வரப்புகளிலும், மூங்கில் பாலங்களிலும் அண்ணல் திருவடி நோக நடந்து சென்றார். ஒவ்வொரு கிராமத்திலும் ஜனங்கள் அவரிடம் ஓடோடி வந்து தங்கள் சோகக் கதைகளைச் சொல்லிப் புலம்பினர்.

77 வயதுக் கிழவரான காந்தி, நவகாளியில் தினசரி 18 மணி நேரம் வேலை செய்தார். அதிகாலையில் 4 மணிக்கு, சில தினங்களில் 2 மணிக்குக் கூட, அவர் எழுந்துவிடுவார். கடிதங்களுக்குப் பதில் எழுதுவதை முதலில் கவனிப்பார். பிறகு பிரார்த்தனை நடத்துவார். சிரத்தை மிகுந்த மாணவனைப் போல் ஒவ்பொரு நாள் காலையிலும் வங்காளி பாஷையைக் கற்பார். ஏழைகளின் குடிசைகளுக்கும் அகதி முகாம்களுக்கும் நேரில் சென்று சாந்தி அளித்தார். மாசு படுத்தப்பட்ட சில ஆலயங்களில் அவர் மறுபடியும் விக்கிரகப் பிரதிஷ்டை நடத்தி வைத்தார். மக்களைப் பீடித்திருந்த அச்சம் மறைந்தது; துன்ப இருள் விலக ஆரம்பித்தது. ஜனங்கள் அழுது புலம்புவதற்குப் பதில் காந்தியுடன் நாம சங்கீர்த்தனம் பாட ஆரம்பித்தனர்.
காந்தி தமக்குப் பிரியமான 'ராம்துன்' பஜனாவளியில் புதிதாக இரு அடிகளைச் சேர்த்துக கொண்டார். "ஈஸ்வர், அல்லா, தேரே நாம்; சப்போ ஸன்மதி தே பகவான்" என்பவையே அந்தப் புதிய, பொருத்தமான அடிகள் (ஈஸ்வரன், அல்லா என்பவை எல்லாம் உமது நாமங்களே; பகவானே எங்கள் அனைவருக்கும் நல்புத்தியை அருளும் - என்பது அவற்றின் பொருள்.)
வங்காளக் கலகத்திற்குப் பதில்-நடவடிக்கையாகப் பீஹாரில் முஸ்லிம்களை ஹிந்துக்கள் பழிவாங்க ஆரம்பித்தனர். ஹிந்து - முஸ்லிம் என்ற பேதம் அறியாத காந்தி உடனே நவகாளியிலிருந்து பீஹாருக்கு விரைந்தோடினார். 1947 மார்ச் 5உ அவர் பாட்னாவை அடைந்தார். பீஹார் சுற்றுப் பிரயாணத்தில் அவருடன் கபார் கானும் கலந்து கொண்டார். தீரத்துக்கும், தியாகத்துக்கும், சேவைக்கும் பெயர் போனவரான பேராசிரியர் அப்துல் பாரி, சாந்தி சேவையில் காந்திக்கு உதவி புரிந்தார். பேராசிரியர் பாரியைக் கள்ளக் கடத்தல் கோஷ்டி ஒன்று சுட்டுக் கொன்றுவிட்டது. அவரது குடும்பத்தாருக்குக் காந்தி ஆறுதல் கூறி அவரது உன்னத உதாரணத்தைப் பின்பற்றும்படி அவர்களைக் கேட்டுக் கொண்டார்.

ஹிந்துக்கள் தங்கள் குற்றத்தைப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டு, கஷ்டம் அடைந்தவர்களுக்குப் புனர்வாழ்வு அளிக்க வேண்டும் எனக் காந்தி கோரினார். நவகாளி அதிக்கிரமத்தைப் பீஹார் தடுத்து நிறுத்தி விட்டதாக ஹிந்துக்கள் நினைப்பது தவறு என்றும்; மிருகத் தனத்தை மிருகத்தனத்தால் வெல்ல முடியாது என்றும்; துவேஷம் இன்றிச் சாகத் துணிவதன் மூலமே அதை வெல்ல முடியும் என்றும் காந்தி போதித்தார். பழிவாங்குவது கோழைத்தனம் என்றும் அதன் மூலம் கலாச்சாரத்தையோ மதத்தையோ சுதந்திரத்தையோ பாதுகாக்க முடியாது என்றும் அவர் எச்சரித்தார்.
ஆசிய உறவு மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக மார்ச் மாத இறுதியில் காந்தி டில்லிக்குப் புறப்பட்டார். "ஆசியாவின் போதனை என்ன என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். அன்பு, சத்தியம் என்பதுதான் மேற்கு நாடுகளுக்கு நீங்கள் அறிவிக்கக் கூடிய போதனை" என்று அவர் மகாநாட்டில் கூறினார்.
கடைசி பிரிட்டிஷ் வைஸ்ராயான லார்டு மவுண்ட்பாட்டனை டில்லியில் காந்தி சந்தித்து பேசினார். நாட்டில் கலகத்தை நிறுத்திச் சாந்தியை ஏற்படுத்தக்கூடிய மாபெரும் சக்தி காந்திதான் என்று வைஸ்ராய் கருதினார்.
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
 
Website Designed by Gandhi Iyakkam, Thanjavur