முதல் வழக்கு
பம்பாயில் இருந்தபோது, ஒரு புறம்
இந்தியச் சட்டத்தைப் படிக்கலானேன், மற்றொரு புறமோ, உணவைப் பற்றிய
என் ஆராய்ச்சிகள். இதில் வீரசந்திர காந்தி என்ற ஒரு நண்பரும்
என்னுடன் சேர்ந்து கொண்டார். என் சகோதரரோ, எனக்குக் கட்சிக்காரர்களைப்
பிடிப்பதற்காக அவரளவில் தம்மால் ஆனதையெல்லாம் செய்து கொண்டிருந்தார்.
இந்தியச் சட்டங்களைப் படிப்பது சங்கடமான வேலையாக
இருந்தது. சிவில் நடைமுறைச் சட்டத்தைப் படிக்க என்னால் முடியவே
இல்லை. ஆனாலும் ஙசாட்சிகள் சட்டங விஷயம் அப்படி இல்லை. வீரசந்திர
காந்தி சொலிஸிட்டர் பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்தார்.
பாரிஸ்டர்களையும் வக்கீல்களையும் குறித்து எல்லாவிதமான கதைகளையும்
அவர் எனக்குச் சொல்வார். ஸர் பிரோஸ்ஷாவின் ஆற்றலுக்குக் காரணமே,
சட்டத்தில் அவருக்கு இருக்கும் அபாரமான ஞானம்தான். ஙசாட்சிகள்
சட்டம்ங அவருக்கு மனப்பாடமாகத் தெரியும். அதன் முப்பத்தி ரெண்டாவது
பிரிவு சம்பந்தப்பட்ட வழக்குகள் எல்லாவற்றையும் அவர் அறிவார்.
பத்ருதீன் தயாப்ஜீயின் அற்புதமான விவாத சக்தி, நீதிபதிகளை ஆச்சரியத்தில்
மூழ்கும்படி செய்துவிடுகிறது என்பார். பெரிய வக்கீல்களைப் பற்றிய
இத்தகைய கதைகளெல்லாம் என்னுடைய மனச்சோர்வை அதிகமாக்கிவிட்டன.
அவர் மேலும் கூறுவார். ஒரு பாரிஸ்டர் ஐந்து
அல்லது ஏழு ஆண்டுகளுக்கு வருவாய் இல்லாமல் காத்திருக்க நேருவது
அசாதாரணம் அன்று. அதனால்தான் நான் சொலிஸிட்டர் பரீட்சைக்குப்
போகிறேன். மூன்று ஆண்டுகளில் உம் வாழ்க்கைப் படகை நீரே செலுத்திக்கொள்ள
உம்மால் முடிந்து விட்டால், உம்மை நீர் அதிர்ஷ்டசாலி என்று கருதிக்
கொள்ள வேண்டும்.
மாதத்திற்கு மாதம் செலவு அதிகரித்துக் கொண்டே
போயிற்று. உள்ளுக்குள் பாரிஸ்டர் தொழிலுக்குத் தயாராகிக் கொண்டுவரும்
போதே, பாரிஸ்டர் என்ற விளம்பரப் பலகையை வெளியில் தொங்கவிடுவது
என் மனதுக்குச் சமாதானம் தராத ஒரு விஷயம். இதனால் என் படிப்பில்
நான் முழுக் கவனத்தையும் செலுத்த இயலவில்லை. சாட்சியத்தைப் பற்றிய
சட்டத்தைப் படிப்பதில் ஓரளவுக்கு எனக்கு விருப்பம் பிறந்தது.
மேய்னே என்பவர் எழுதிய ஹிந்து சட்ட புத்தகத்தை ஆழ்ந்த சிரத்தையுடன்
படித்தேன். ஆனாலும், ஒரு வழக்கை நடத்துவதற்கான துணிவு எனக்கு
இல்லை. சொல்லால் கூறமுடியாத அளவுக்கு நான் அதைரியம் கொண்டிருந்தேன்.
மாமனார் வீட்டுக்குப் புதிதாக வந்த மருமகளைப் போலத் தவித்தேன்.
அந்தச் சமயத்தில், மமிபாய் என்ற ஒருவரின் வழக்கை
நடத்துவதற்கு எடுத்துக் கொண்டேன். அது, ஸ்மால்காஸ் வழக்கு அந்த
வழக்கைக் கொண்டுவந்து கொடுத்த தரகருக்கு ஏதாவது கொஞ்சம் தரகுப்
பணம் தர வேண்டும் என்று சொன்னார்கள். அப்படிக் கொடுப்பதற்கு
நான் கண்டிப்பாக மறுத்துவிட்டேன். மாதம் மூவாயிரம், நாலாயிரம்
சம்பாதிக்கும் பெரிய கிரிமினல் வக்கீலான இன்னார் கூடத் தரகு
கொடுக்கிறாரே! என்றார்கள்.
அவரை நான் பின்பற்ற வேண்டியதில்லை என்றேன்.
எனக்கு மாதம் ரூ. 300 கிடைத்தாலே போதும். என் தந்தை அதற்கு மேல்
சம்பாதிக்கவில்லை என்றும் கூறினேன். அந்தக் காலமெல்லாம் மலையேறிவிட்டது.
இப்பொழுது பம்பாயில், பயப்பட வேண்டிய அளவுக்குச் செலவுகள் கூடி
விட்டன. ஆகையால், நீர் சாமர்த்தியமாக நடந்து கொள்ள வேண்டும்
என்றார்கள். நான் பிடிவாதமாக இருந்து விட்டேன். தரகுப் பணம்
கொடுக்கவில்லை என்றாலும் மமிபாயின் வழக்கு என்னிடம் வந்தது.
அது மிகவும் சுலபமான வழக்கு, எனக்கு ரூபாய் 30 கட்டணம் கொடுக்க
வேண்டும் என்றேன். கோர்ட்டில் அந்த வழக்கு ஒரு நாளுக்கு மேல்
நடக்கும் என்று தோன்றவில்லை.
ஸ்மால்காஸ் கோர்ட்டில் நான் ஆஜராவது அதுவே முதல்
தடவை. நான் பிரதிவாதிக்காக ஆஜரானதால் வாதியின் சாட்சிகளை நான்
குறுக்கு விசாரணை செய்ய வேண்டும். அதற்காக எழுந்தேன் ஆனால் என்
தைரியமெல்லாம் போய், தலை சுற்ற ஆரம்பித்து விட்டது. கோர்ட்டு
முழுவதுமே சுழலுவதாக எனக்குத் தோன்றிற்று குறுக்கு விசாரணை செய்ய
ஒரு கேள்விகூட என் சிந்தனையில் எழவில்லை. நீதிபதி சிரித்திருப்பார்,
வக்கீல்களும் அக்காட்சியை ரசித்திருப்பார்கள் என்பதில் சந்தேகம்
இல்லை. ஆனால், நானோ இதில் எதையும காணும் நிலையில் இல்லை. பேசாமல்
உட்கார்ந்துவிட்டேன். ஙஇந்த வழக்கை நடத்த என்னால் முடியாது பட்டேலை
அமர்த்திக்கொள்ளலாம். எனக்குக் கொடுத்த கட்டணத்தையும் திருப்பித்
தந்து விடுகிறேன்ங என்று ஏஜெண்டிடம் சொன்னேன். ரூ. 51 கட்டணம்
கொடுப்பதெனப் பேசி, ஸ்ரீ பட்டேல் வக்கீலாக அமர்த்தப்பட்டார்
அவருக்கோ இந்த வழக்கு குழந்தை விளையாட்டுப் போன்றதாகும்.
என் கட்சிக்காரர் வெற்றி பெற்றாரா, தோற்றாரா
என்பது கூட எனக்குத் தெரியாது. கோர்ட்டை விட்டு அவசரமாகக் கிளம்பினேன்.
ஆனால் என்னைக் குறித்து எனக்கே வெட்கமாக இருந்தது. வழக்கை நடத்தும்
தைரியம் எனக்கு ஏற்படும்வரையில், திரும்பவும் கோர்ட்டுக்குப்
போகவே இல்லை. நான் செய்து கொண்ட தீர்மானத்தில் பாராட்டக் கூடியது
எதுவும் இல்லை. அவசியத்தை முன்னிட்டு, வேறு வழி இல்லாமலேயே நான்
அந்த முடிவுக்கு வந்தேன். தோற்றுப் போவதற்கு என்று வழக்கை என்னிடம்
கொண்டு வந்து ஒப்படைக்க யாரும் அவ்வளவு முட்டாளாக இருக்க மாட்டார்கள்.
ஆயினும் பம்பாயில் இன்னும் ஒரு வழக்கு என்னிடம்
வரக்காத்திருந்தது. ஒரு விண்ணப்பத்தைத் தயாரிக்க வேண்டி இருந்ததே
அது. ஓர் ஏழை முஸ்லீமின் நிலத்தைப் போர்பந்தரில் பறிமுதல் செய்து
விட்டார்கள். பெரிய மனிதரான என் தந்தைக்கு ஏற்ற மகனாக நான் இருப்பேன்
என்று எண்ணி, அவர் என்னிடம் வந்தார். அவருடைய கட்சியில் பலம்
இல்லை என்றே தோன்றிற்று. என்றாலும், விண்ணப்பத்தை அச்சிடும்
செலவை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி, விண்ணப்பம் தயாரிக்க
ஒப்புக் கொண்டேன். அதைத் தயாரித்து, நண்பர்களுக்குப் படித்துக்
காட்டினேன். அவர்களும் அதை அங்கீகரித்தார்கள். விண்ணப்பம் தயாரிப்பதிலாவது
எனக்குத் தகுதியிருக்கிறது என்ற அளவுக்கு அது எனக்கு நம்பிக்கை
ஏற்படும்படி செய்தது. உண்மையிலேயே அந்த ஆற்றல் எனக்கு இருந்தது.
கட்டணம் எதுவுமே வாங்கிக் கொள்ளாமல் நான் விண்ணப்பங்கள்
தயாரித்துக் கொடுப்பதாக இருந்தால் என் தொழில் நன்றாக நடக்கும்.
ஆனால், சாப்பாட்டுக்கு வழி வேண்டுமே ? உபாத்தியாயர் தொழிலுக்குப்
போய்விடலாமா என்று எண்ணினேன். எனக்கு ஆங்கில ஞானமும் நன்றாக
இருந்தது. ஏதாவது ஒரு பள்ளிக்கூடத்தில் மெட்ரிகுலேஷன் மாணவருக்கு
ஆங்கிலம் போதிக்கும் வேலை, எனக்குப் பிரியமாக இருந்திருக்கும்
இந்த வகையில் என் செலவில் ஒரு பகுதியையாவது சமாளித்தவனாவேன்.
பத்திரிக்கைகளில் ஒரு விளம்பரத்தைப் பார்த்தேன், தினம் ஒரு மணி
நேரம் போதிப்பதற்கு ஓர் ஆங்கில ஆசிரியர் தேவை. சம்பளம் ரூ. 75
என்று அந்த விளம்பரத்தில் இருந்தது. ஒரு பிரபலமான உயர்நிலைப்
பள்ளியின் விளம்பரமே அது. அந்த உத்தியோகத்திற்கு மனுப் போட்டேன்.
நேரில் சந்தித்துப் பேச அழைப்பும் வந்தது. அதிக உற்சாகத்தோடு
அங்கே போனேன். நான் பி.ஏ. பட்டதாரி அல்ல என்பதை அப் பள்ளிக்கூடத்
தலைமை ஆசிரியர் கண்டுகொண்டதும், என்னை நியமிக்க வருத்தத்துடன்
மறுத்துவிட்டார்.
ஆனால், லத்தீனை இரண்டாவது மொழியாகக் கொண்டு
நான் லண்டன் மெட்ரிகுலேஷன் பரீட்சையில் தேறியிருக்கிறேனே என்றேன்.
உண்மை ஆனால் எங்களுக்கு பி.ஏ. பட்டதாரியே வேண்டும் என்று அவர்
சொல்லிவிட்டார். ஆகவே, வேறு வழியில்லை. மனம் சோர்ந்து போய்க்
கைகளைப் பிசைந்து கொண்டேன். என் சகோதரரும் அதிகக் கவலைப்பட்டார்.
பம்பாயில் மேற்கொண்டும் காலத்தை வீணாக்கிக் கொண்டிருப்பதில்
பயனில்லை என்ற முடிவுக்கு இருவரும் வந்துவிட்டோம். எனது சகோதரர்,
ராஜ்கோட்டில் ஒரு சின்ன வக்கீல் நானும் அங்கே போய்விடுவது என்று
முடிவாயிற்று. மனுக்கள், விண்ணப்பங்கள் தயாரிப்பதில் கொஞ்சம்
வேலையை அவர் எனக்குக் கொடுக்கலாம். மேலும் இப்பொழுதே ராஜ்கோட்டில்
ஒரு குடித்தனம் இருப்பதால் பம்பாயில் இருக்கும் குடித்தனத்தை
எடுத்துவிடுவதால் பணமும் நிரம்ப மிச்சமாகும். இந்த யோசனை எனக்குப்
பிடித்தது. இவ்விதம் பம்பாயில் ஆறு மாதங்கள் தங்கி இருந்த பிறகு
அங்கே இருந்த என் சிறு குடித்தனத்தை கலைத்து விட்டோம்.
நான் பம்பாயில் இருந்தபோது, தினமும் ஹைகோர்ட்டுக்குப்
போவேன். ஆனால் அங்கே ஏதாவது கற்றுக் கொண்டதாக நான் கூறுவதற்கில்லை.
அதிகமாகக் கற்றுக் கொள்ளுவதற்கு வேண்டிய சட்ட ஞானம் எனக்கு இல்லை.
வழக்குகளின் நடைமுறை எனக்குப் பிடிபடுவதில்லை. ஆகையால், அங்கே
தூங்கிவிட்டுத் திரும்புவேன். இதில் எனக்கு கூட்டாளிகள் பலர்
இருந்தனர். ஆகவே நான் அவ்வளவாக வெட்கப்படுவதில்லை. கொஞ்ச நாட்களுக்குப்
பிறகு ஹைகோர்ட்டில் தூங்குவதே ஒரு நாகரிகம் என்று எண்ணக் கற்றுக்கொண்டுவிட்டதும்,
இருந்த வெட்க உணர்ச்சியும் கூட என்னை விட்டுப் போய்விட்டது.
பம்பாயில் நான் இருந்ததைப் போல் இந்தத் தலைமுறையிலும்
கட்சிக்காரரே இல்லாத பாரிஸ்டர்கள் யாராவது இருப்பார்களானால்
வாழ்க்கை நடத்துவதைப் பற்றிச் சில அனுபவ யோசனைகளை அவர்களுக்குக்
கூற விரும்புகிறேன். கீர்காமில் நான் குடியிருந்த போதிலும் வண்டியிலோ,
டிராம் வண்டியிலோ போவதே இல்லை. தினமும் ஹைகோர்ட்டுக்கு நடந்தே
போவது என்பதை ஒரு விதியாக வைத்துக் கொண்டேன். அங்கே போய்ச் சேர
எனக்கு நாற்பத்தைந்து நிமிடங்கள் ஆகும்.
வீட்டுக்குத் திரும்பும் போதும் அநேகமாக நடந்தே
வருவேன். வெயிலில் நடந்து நடந்து அந்தச் சூடும் என்னை எதுவும்
செய்வதில்லை. கோர்ட்டுக்கு நடந்து போய் வந்து கொண்டிருந்ததால்
அதிகப் பணம் மிச்சமாயிற்று. மேலும் பம்பாயில் என் நண்பர்களில்
பலர், வழக்கமாக நோயுற்று வந்தபோது, நான் ஒரு தடவையேனும் நோய்வாய்ப்பட்டதில்லை.
நான் பணம் சம்பாதிக்க ஆரமபித்துவிட்ட பிறகும் கூட, காரியாலயத்திற்கு
நடந்தே போய்த் திரும்பும் வழக்கத்தை மாத்திரம் விடவே இல்லை.
அப்பழக்கத்தின் நன்மைகளை நான் இன்னும் அனுபவித்து வருகிறேன்.