இந்தியாவில் ...
பம்பாய்க்குப் போகும் வழியில்
ரெயில் அலகாபாத்தில் நாற்பத்தைந்து நிமிடங்கள் நின்றது. அந்த
நேரத்தில் அந்நகரைச் சுற்றிப் பார்த்து விடலாம் என்று முடிவு
செய்தேன். மருந்துக் கடையில் சில மருந்துகள் வாங்க வேண்டியிருந்தது.
மருந்துக் கடைக்காரரோ தூங்கி விழுந்து கொண்டிருந்தார். நான்
கேட்ட மருந்தை எடுத்துக் கொடுப்பதில் அநியாயமாக நேரம் கடத்தி
விட்டார். இதன் பலன் என்னவென்றால் நான் ஸ்டேஷன் வந்து சேர்ந்த
போது, அப்பொழுதுதான் ரயில் புறப்பட்டு போய் விட்டது. எனக்காக
ஸ்டேஷன் மாஸ்டர் அன்போடு ஒரு நிமிடம வண்டியை நிறுத்தி வைத்திருந்து
இருக்கிறார். நான் வரவில்லை. என்று தெரிந்ததும், உஷாராக என்னுடைய
சாமான்களை ரெயிலிலிருந்து இறக்கி வைத்து விடும்படியும் செய்திருக்கிறார்.
கெல்னர் கட்டிடத்தில் ஓர் அறையை அமர்த்திக்
கொண்டேன். என் வேலையை அப்பொழுதே ஆரம்பித்து விடுவது என்று தீர்மானித்தேன்.
அலகாபாத்திலிருந்து பிரசுரமாகும் பயோனீர் பத்திரிகையைக் குறித்து
நான் அதிகமாகக் கோள்விப்பட்டிருந்தேன். இந்தியரின் தேசியக் கோரிக்கைகளை
எதிர்க்கும் பத்திரிகை அது என்றும் அறிந்து கொண்டிருந்தேன் அச்சமயம்
ஸ்ரீ செஸ்னே ( இளையவர் ) அதன் ஆசிரியராக இருந்தார் என்று எனக்கு
ஞாபகம். எல்லாக் கட்சியினரின் ஆதரவையும் பெற நான் விரும்பினேன்.
ஆகவே, ஸ்ரீ செஸ்னேக்கு ஒரு குறிப்பு அனுப்பினேன். அதில், எனக்கு
ரெயில் தவறிவிட்ட விவரத்தைக் கூறினேன். மறுநாள் வண்டிக்கு நான்
புறப்படுவதற்கு முடியும் வகையில் சந்தித்து பேச என்னை அனுமதிக்க
வேண்டும் என்றும் அதில் கோரினேன்.
சந்தித்துப் பேச உடனே அனுமதித்தார். மகிழ்ந்தேன்.
முக்கியமாக நான் கூறியதையெல்லாம் அவர் பொறுமையாகக் கேட்டுக்
கொண்டதைக் குறித்து, நான் அதிக சந்தோஷம் அடைந்தேன். நான் என்ன
எழுதினாலும் அதைக் குறித்துத் தம் பத்திரிகையில் அபிப்பிராயம்
எழுதுவதாகவும் கூறினார். அதோடு இன்னும் ஒன்றும் கூறினார். ஆப்பிரிக்காவில்
குடியேறி இருக்கும் வெள்ளைக்காரர்களின் கருத்தையும் அறிந்து,
அதற்குரிய மதிப்பையும் கொடுக்கத் தாம் கடமைப்பட்டிருப்பதால்
இந்தியரின் கோரிக்கைகள் எல்லாவற்றையும் ஆதரிப்பதாகத் தாம் வாக்களிக்க
முடியாது என்றார். "இப்பிரச்னையை நீங்கள் கவனித்து, அதைக்
குறித்துப் பத்திரிகையில் விவாதிப்பதே போதும். நான் கேட்பதும்
அடைய விரும்புவதும் எங்களுக்கு உரிய நியாயமான உரிமைகளை மாத்திரமே
அன்றி வேறு எதையும் அல்ல" என்றேன்.
அன்றைய மீதிப் பொழுதை, ஊரைச்சுற்றிப் பார்ப்பதிலும்,
திரிவேணி சங்கமத்தின் அற்புதக் காட்சியைக் கண்டு ஆனந்திப்பதிலும்
கழித்தேன். என்னுடைய வேலைத் திட்டத்தைக் குறித்தும் சிந்தித்தேன்.
எதிர்பாராத விதமாக நான் ப்யோனீர் ஆசிரியரைச் சந்தித்துப் பேசியது,
தொடர்ந்து நடந்த பல சம்பவங்களுக்கு அடிப்படை ஆயிற்று. இறுதியில்
என்னை நேட்டாலில் அடித்துக் கொல்ல முயன்றதில் போய் இது முடிந்தது.
பம்பாயில் தங்காமல் நேரே ராஜ்கோட்டிற்குச் சென்றேன்.
அங்கே தென்னாப்பிரிக்க இந்தியர் நிலைமையைக் குறித்து ஒரு துண்டுப்
பிரசுரத்தை எழுதுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தேன். அதை
எழுதவும் அச்சிடவும் ஒரு மாதம் ஆயிற்று. அதற்குப் பச்சை நிற
மேல் அட்டை போடப்பட்டது. ஆகவே அது பச்சைத் துண்டுப் பிரசுரம்
என்று வழங்கலாயிற்று. அதில் தென்னாப்பிரிக்க இந்தியரின் நிலையைக்
குறித்து வேண்டுமென்றே அடக்கமாக குறைத்தே கூறியிருந்தேன். முன்னால்
நான் இரு துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டதாகக் கூறியிருக்கிறேன்.
அவற்றில் இருந்ததைவிட இதில் நிதானமான பாஷையையே உபயோகித்திருந்தேன்.
ஏனெனில், ஒரு விஷயத்தைத் தூரத்திலிருந்து கேள்விப்படும் போது
உள்ளதையும்விடப் பெரியதாகவே அது தோன்றி விடுகிறது என்பதை நான்
அறிவேன்.
பத்தாயிரம் பிரதிகள் அச்சிட்டேன். இந்தியாவின்
எல்லாப் பகுதிகளிலும் இருக்கும் பத்திரிகைகளுக்கும் தலைவர்களுக்கும்
அதை அனுப்பினேன். அதைக் குறித்து முதலில் தலையங்கம் எழுதிய பத்திரிகை
பயோனீர். அத் தலையங்கத்தின் சுருக்கத்தை ராய்ட்டர் செய்தி ஸ்தாபனம்
இங்கிலாந்துக்குத் தந்தி மூலம் அனுப்பியது. அந்தச் சுருக்கத்திற்கு
ஒரு சுருக்கத்தை ராய்ட்டரின் லண்டன் காரியாலயம் நேட்டாலுக்கு
அனுப்பிற்று. அந்த தந்தி அச்சில் மூன்று வரிக்கு மேல் இல்லை.
செய்தி, அவ்வளவு சிறியதாக இருந்தாலும் நேட்டாலில் இந்தியர்கள்
நடத்தப்படும் விதத்தைக் குறித்து, நான் கூறியதை அச் செய்தி மிகைப்படுத்திக்
கூறுவதாக இருந்தது. மேலும், அச் செய்தி என் வார்த்தைகளைக் கொண்டு
வரையப்பட்டதாகவும் இல்லை. நேட்டாலில் இதன் விளைவு என்னவாயிற்று
என்பதைப் பிறகு கவனிப்போம். இதற்கு மத்தியில், முக்கியமான பத்திரிகைகள்
எல்லாமே இப் பிரச்னையைக் குறித்து விரிவாக அப்பிராயங்கள் கூறின.
இத் துண்டுப் பிரசுரங்களைத் தபாலில் அனுப்புவதற்குத்
தயார் செய்வது சுலபமான வேலையே அல்ல. இவற்றைக் காகிதம் போட்டுச்
சுற்றி அனுப்புவது போன்ற வேலைகளுக்குக் கூலி கொடுத்து ஆள் அமர்த்தினால்
அதிகச் செலவு ஆகியிருக்கும். ஆகவே, மிக எளிதான உபாயம் ஒன்றைக்
கண்டுபிடித்தேன். பக்கத்தில் இருந்த குழந்தைகளையெல்லாம் திரட்டினேன்.
பள்ளிக் கூடம் இல்லாதபோது காலையில் இரண்டு, மூன்று மணி நேர உழைப்பை
வலிய அளிக்க முன்வருமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டேன். அப்படியே
செய்ய அவர்கள் மனம் உவந்து ஒப்புக் கொண்டார்கள். அவர்களை வாழ்த்தி,
நான் சேர்த்து வைத்திருந்த பழைய தபால் ஸ்டாம்புகளை அவர்களுக்குப்
பரிசாகக் கொடுப்பதாகவும் கூறினேன். குழந்தைகள் கொஞ்ச நேரத்தில்
வேலையை முடித்து விட்டார்கள். சிறு குழந்தைகளைத் தொண்டர்களாக
உபயோகிப்பதில் இதுவே என் முதல் பரீட்சை அக் குழந்தைககளில் இருவர்
இன்று என் சக ஊழியர்களாக இருக்கின்றனர்.
அச் சமயம் பம்பாயில் பிளேக் நோய் பரவியது. இதனால்
சுற்றுப்புறங்களில் எல்லாம் ஒரே பீதி ஏற்பட்டது. ராஜ்கோட்டிலும்
அந்த நோய் பரவிவிடும் என்ற பயம் இருந்தது. சுகாதார இலாகாவுக்கு
நானும் கொஞ்சம் உதவியாக இருக்கலாம் என்று எண்ணினேன். சேவை செய்யத்
தயார் என்று அரசாங்கத்திற்கு அறிவித்தேன். அவர்களும் ஏற்றுக்கொண்டனர்.
அதன் பேரில் இது சம்பந்தமாகக் கவனிக்க நியமித்த ஒரு கமிட்டியில்
என்னையும் சேர்த்தனர். கக்கூசுகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டு;ம்
என்று நான் முக்கியமாக வற்புறுத்தினேன். ஒவ்வொரு தெருவிலும்
கக்கூசுகள் இருக்கும் நிலையைப் போய் பார்வையிடுவது என்று கமிட்டி
முடிவு செய்தது. தங்கள் கக்கூசுகளைப் போய் பார்ப்பதை. ஏழைகள்
ஆட்சேபிக்க வில்லை நாங்கள் கூறிய யோசனைகளையும் அவர்கள் நிறைவேற்றிக்
கக்கூசுகளைச் சுத்தமாக வைத்தனர். ஆனால் பணக்காரர்கள் வீட்டுக்
கக்கூசுகளைப் பார்க்க நாங்கள் சென்றபோது. அவர்களில் சிலர் நாங்கள்
அவற்றைப் பார்க்க அனுமதிக்கக்கூட மறுத்து விட்டனர். அப்படியிருக்க,
நாங்கள் கூறிய யோசனையை அவர்கள் காது கொடுத்துக் கேட்டார்களா
என்பதைப்பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. பணக்காரர்கள் வீட்டுக்
கக்கூசுகளே அதிக ஆபாசமாக இருந்தன என்பது எங்கள் பொதுவான அனுபவம்.
அவை இருண்டிருந்தன. ஒரே துர் நாற்றம், ஒரே ஆபாசம், புழுக்களும்
நெளிந்து கொண்டிருந்தன. செய்யுமாறு நாங்கள் கூறிய அபிவிருத்திகள்
மிகச் சுலபமானவை அதாவது, கழிக்கும் மலம் தரையில் விழாதவாறு அதற்குத்
தொட்டி வைக்குமாறு கூறினோம். மூத்திரமும் தரையில் விழுந்து,
அந்த இடம் ஒரே ஈரம் ஆகிவிடாமல் அதையும் தொட்டியில் பிடிக்கும்படி
சொன்னோம். கக்கூசுகளில் வெளிச்சமும் காற்றோட்டமும் இருப்பதற்காகவும்,
அவற்றைத் தோட்டி நன்றாக சுத்தம் செய்வதற்கு வசதியாக இருப்பதற்காகவும்
வெளிச் சுவருக்கும் கக்கூசுக்கும் மத்தியில் இருக்கும் சிறு
சிறு தடுப்புக்களையெல்லாம் இடித்து விடுமாறும் கேட்டுக் கொண்டோம்.
இந்தக் கடைசிக் சீர்திருத்ததத்திற்குப் பணக்காரர்கள் ஏராளமான
ஆட்சேபங்களைக் கூறினார்கள். அநேகர் நாங்கள் கூறியதைப் பின் பற்றி
எதுவுமே செய்யவில்லை.
தீண்டாதார் குடியிருந்த வீடுகளையும் கமிட்டி
போய்ப் பார்க்க வேண்டியிருந்தது. அங்கே என்னுடன் வருவதற்குக்
கமிட்டி அங்கத்தினர்களில் ஒருவர் மாத்திரமே தயாராக இருந்தார்.
மற்றவர்களோ, அவ்வீடுகளுக்குப் போவது என்பதே மகா பாதகமான காரியம்
என்று நினைத்தனர். அதிலும் அவர்களுடைய கக்கூசைப் போய்ப் பார்ப்பது
இன்னும் அதிக மோசமானது என்று எண்ணினர். ஆனால், அவ்வகுப்பினரின்
இருப்பிடங்களைப் பார்த்ததும் நான் ஆச்சரியமும் மகிழ்ச்சியும்
அடைந்தேன். அத்தகைய பகுதிகளுக்கு நான் சென்றது அதுதான் முதல்
தடவை. அங்கிருந்த ஆண்களும் பெண்களும் நாங்கள் வந்ததைப் பார்த்து
ஆச்சரியம் அடைந்தனர். அவர்களுடைய கக்கூசுகளைப் பார்க்க வேண்டும்
என்று நான் கேட்டேன். "எங்களுக்கும் கக்கூசுகளா" என்று
அவர்கள் வியந்தார்கள். பிறகு "வெளியே திறப்பான இடங்களில்
நாங்கள் போய் மலஜலம் கழித்துவிடுவோம் உங்களைப் போன்ற பெரிய மனிதர்களுக்கல்லவா
கக்கூசு" என்றனர்.
"சரி, அப்படியானால் உங்கள் வீட்டுக்குள்
வந்து, நாங்கள் பார்ப்பதைப்பற்றி உங்களுக்கு ஆட்சேபம் இல்லை
அல்லவா ?" என்று கேட்டேன். "நன்றாக வாருங்கள், வந்து
பாருங்கள், ஐயா. எங்கள் வீடுகளின் ஒவ்வொரு மூலை முடுக்கையும்
நீங்கள் பார்க்கலாம் எங்கள் வீடுகள், வீடுகளா ? அவை வளைகள்"
என்றனர். உள்ளே போனேன். வெளிப்புறத்தில் இருப்பதைப் போலவே உள்ளேயும்
சுத்தமாக இருப்பதைக் கண்டு ஆனந்தம் அடைந்தேன். வாசல்களையும்
நன்றாக வைத்து இருந்தனர். தரையைச் சாணம் கொண்டு அழகாக மெழுகி
இருந்தனர். அங்கே இருந்த பானைகளும் தட்டுகளும் கொஞ்சம்தான்.
என்றாலும் அவை சுத்தமாகவும் பளபளப்பாகவும் இருந்தன. அப்பகுதியில்
பிளேக் நோய் பரவிவிடும் என்ற பயமே இல்லை.
மேல் சாதியினர் வசிக்கும் பகுதியில் நாங்;கள்
ஒரு கக்கூசைப் பார்த்தோம். அதைப்பற்றிக் கொஞ்சம் சொல்லாமல் இருப்பதற்கு
இல்லை. வீட்டின் ஒவ்வோர் அறைக்கும் ஒரு ஜலதாரை இருந்தது. தண்ணீர்
விடவும் மூத்திரம் கழிக்கவும் அந்த ஜலதாரை உபயோகிக்கப்பட்டது.
அதனால் வீடு முழுவதுமே துர்நாற்றம் இருக்கும். நாங்கள் பார்த்த
வீடுகள் ஒன்றில், மாடியிலிருந்த ஒரு படுக்கை அறையையும் பார்த்தோம்.
அதிலிருந்த ஜலதாரை, மலஜலம் இரண்டும் கழிக்கக் கக்கூசாக உபயோகிக்கப்பட்டு
வந்தது. அந்த ஜலதாரை கீழே போக ஒரு குழாயும் இருந்தது. அந்த அறையிலிருந்த
துர்நாற்றத்தைச் சகித்துக்கொண்டு அங்கே நிற்கவே முடியவில்லை.
அங்கே எப்படித்தான் படுத்துத் தூங்குகிறார்கள் என்பதை வாசகர்களே
சிந்தித்துப் பார்த்துக் கொள்ள விட்டுவிடுகிறேன்.
வைஷ்ணவக் கோயிலுக்கும் கமிட்டி போய்ப் பார்த்தது.
அந்தக் கோயிலின் அர்ச்சகர் எங்கள் குடும்பத்திற்கு வேண்டியவர்.
ஆகவே, எல்லாவற்றையும் பார்த்து, நாங்கள் செய்ய விரும்பும் சீர்திருத்தங்களைக்
கூறலாம் என்று அவர் ஓப்புக் கொண்டார். அக் கோயிலின் ஒரு பகுதியை
அவர் கூடப் பார்த்ததே இல்லை. அந்த இடத்தில்தான் குப்பை கூளங்களையும்
எச்சில் இலைகளையும் சுவரைத் தாண்டி வீசிப் போட்டுவிடுவது வழக்கம்
காக்கைகளும் பருந்துகளும் அங்கே எப்பொழுதும் இருந்து வந்தன.
கக்கூசுகளும் மிக ஆபாசமாக இருந்தன. நாங்கள் கூறிய யோசனைகளை எவ்வளவு
தூரம் அந்த அர்ச்சகர் நிறைவேற்றிவைத்தார். என்பதைப் பார்க்க
நான் அதிக நாட்கள் ராஜ்கோட்டில் இல்லை. கடவுளை வழிபடும் இடங்களில்
அவ்வளவு அசுத்தங்கள் இருப்பதைக் கண்டு மனவேதனைப்பட்டேன். தெய்வீகமானது
என்று கருதப்படும். ஓர் இடத்தில் சுகாதார விதிகள் கவனமாக நிறைவேற்றப்பட்டிருக்கும்
என்றே யாரும் எதிர்பார்ப்பார்கள் அகம், புறம் ஆகிய இரு தூய்மைகளும்
இருக்க வேண்டியது முக்கியம் என்று ஸ்மிருதி கர்த்தாக்கள் மிகவும்
வற்புறுத்திக் கூறியிருக்கிறார்கள் என்பதை அப்பொழுதே நான் அறிந்திருந்தேன்.