அவுரிச் சாகுபடி அநீதி
ஜனக மகாராஜன் ஆண்ட நாடு, சம்பாரண்.
அங்கே மாந்தோப்புக்கள் ஏராளமாக இருப்பதைப் போலவே, 1917ஆம் ஆண்டு
வரையில், அவுரித் தோட்டங்களும் நிறைய இருந்து வந்தன. சம்பாரண்
குடியானவர் ஒவ்வொருவரும், தாம் சாகுபடி செய்யும் நிலத்தின் இருபதில்
மூன்று பாகத்தில் தமது நிலச்சுவான்தாருக்காக அவுரியைக் கட்டாயம்
பயிர் செய்தாக வேண்டும் என்று சட்டம் இருந்தது. இதற்கு தீன்
கதியா முறை என்று பெயர். இருபது கதியாக்கள் கொண்டது ஒரு ஏக்கர்.
அதில் மூன்று கதியாவில் அவுரிச் சாகுபடி செய்யவேண்டும் என்று
இருந்ததால் அம்முறைக்குத் தீன் கதியா என்று பெயர். சம்பாரண்
இருக்கும் இடம் மாத்திரம் அல்ல, அப்பெயர் கூட, எனக்கு அப்பொழுது
தெரியாது என்பதை நான் ஒப்புக் கொள்ளவே வேண்டும். அவுரித் தோட்டங்களைப்
பற்றியும் எனக்கு எதுவும் தெரியாது. அவுரிப் பொட்டணங்களைப் பார்த்திருக்கிறேன்
ஆனால், சம்பாரணில் ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்குப் பெருந்துன்பங்களை
விளைவித்து அவுரியைப் பயிரிட்டுத் தயாரிக்கிறார்கள் என்பது எனக்குத்
தெரியாது. இத்துன்பங்களை அனுபவித்து வந்த விவசாயிகளில் ஒருவர்
ராஜ்குமார் சுக்லா. தம்மைப்போல மற்றும் ஆயிரக்கணக்கான விவசாயிகள்
அனுபவித்து வரும் அநீதியை எப்படியும் போக்க வேண்டும் என்ற ஆர்வம்
மிகுந்தவர் அவர். 1916-ஆம் ஆண்டில் காங்கிரஸ் மகாநாட்டிற்கு
நான் லட்சுமணபுரி போயிருந்தபோது அவர் என்னைப் பிடித்துக் கொண்டார்.
எங்கள் துயரங்களைப்பற்றிய விவரங்களையெல்லாம்
வக்கீல் பாபு உங்களுக்குக் கூறுவார் என்று அவர் சொன்னார். சம்பாரணுக்கு
வருமாறும் என்னை வற்புறுத்தினார். வக்கீல் பாபு என்று அவர் சொன்னது,
பாபு பிரஜ்கி÷ஷார் பிரசாத்தையே. அவர் சம்பாரணில் எனக்கு மிகச்
சிறந்த சக ஊழியரானார். பீகாரில் பொதுஜன சேவைக்கு உயிராகவும்
அவர் இருந்தார். ராஜ்குமார் சுக்லா, அவரை என் கூடாரத்திற்கு
அழைத்து வந்தார். அவர் கால் சட்டை அணிந்து, கறுப்பு மேல் சட்டையும்
போட்டிருந்தார். அப்பொழுது பிரஜ்கி÷ஷார் பாபு எனக்கு அவ்வளவாக
ஒரு நல்ல அபிப்பிராயத்தை உண்டாக்கவில்லை. ஒன்றும் தெரியாத விவசாயிகளை
ஏமாற்றிப் பிழைக்கும் ஒரு வக்கீலாக அவர் இருக்கக்கூடும் என்றே
நான் எண்ணினேன். சம்பாரணைப் பற்றி அவர் வாய் மொழி மூலம் கேட்டறிந்ததும்,
என் வழக்கத்தை ஒட்டி, நிலைமையை நேரில் பார்ப்பதற்கு முன்னால்
நான் எந்தவித அபிப்பிராயமும் கூறுவதற்கில்லை. காங்கிரஸில் தயவு
செய்து நீங்களே தீர்மானத்தைக் கொண்டு வாருங்கள். இப்போதைக்கு
என்னைச் சும்மா விட்டு விடுங்கள் என்றேன். காங்கிரஸிடமிருந்தும்
கொஞ்சம் உதவியைப் பெற ராஜ்குமார் சுக்லா விரும்பினார். சம்பாரண்
மக்களிடம் அனுதாபம் தெரிவிக்கும் தீர்மானம் ஒன்றைப் பாபு பிரஜ்கி÷ஷார்
பிரசாத் கொண்டு வந்தார். அத்தீர்மானம் காங்கிரஸில் ஏகமனதாக நிறைவேறியது.
ராஜ்குமார் சுக்லா மகிழ்ச்சியடைந்தாரெனினும்
திருப்தி அடைந்துவிடவில்லை. நானே நேரில் சம்பாரணுக்கு வந்து
விவசாயிகளின் துயரங்களைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினார்.
நான் செய்யவிருந்த சுற்றுப் பிரயாணத்தில் சம்பாரணையும் சேர்த்துக்
கொள்ளுவதாகவும், இரண்டொரு நாள் அங்கே இருப்பதாகவும் சொன்னேன்.
ஒரு நாளே போதும். அங்கே நடப்பதையெல்லாம் உங்கள் கண்ணாலேயே நீங்கள்
காணலாம் என்றார், அவர். லட்சுமணபுரியிலிருந்து கான்பூருக்குப்
போனேன். ராஜ்குமார் சுக்லா அங்கும் என்னுடன் வந்தார். இங்கிருந்து
சம்பாரண் அருகிலேயே இருக்கிறது. அங்கே வருவதற்கென்று ஒரு நாள்
ஒதுக்குங்கள் என்று அவர் வற்புறுத்தினார். தயவுசெய்து இந்தத்
தடவை மன்னித்துவிடுங்கள். ஆனால், நான் பிறகு நிச்சயமாக வருகிறேன்
என்று கூறி மேற்கொண்டும் என்னைக் கட்டுப்படுத்திக்கொண்டேன்.
பிறகு ஆசிரமத்திற்குத் திரும்பினேன். விடாக்கண்டரான ராஜ்குமார்
அங்கேயும் வந்துவிட்டார். நீங்கள் வரும் நாளைத் தயவுசெய்து இப்பொழுதே
குறிப்பிட்டு விடுங்கள் என்றார்.
சரி, இன்ன தேதியில் நான் கல்கத்தாவில் இருக்க
வேண்டியிருக்கிறது. அப்பொழுது வந்து என்னைச் சந்தித்து, அங்கே
அழைத்துப் போங்கள் என்றேன். நான் போக வேண்டியது எங்கே, செய்ய
வேண்டியது என்ன, பார்க்க வேண்டியது எது என்பதெல்லாம் எனக்குத்
தெரியாது. கல்கத்தாவில் பூபேன் பாபுவின் வீட்டிற்கு நான் போய்ச்
சேருவதற்கு முன்னாலேயே ராஜ்குமார் சுக்லா அங்கே போய் எனக்காகக்
காத்துக்கொண்டிருந்தார். இவ்விதம் கள்ளங்கபடமற்ற, எளிய ஆனால்,
மிக்க உறுதியுடைய இந்த விவசாயி என்னைப் பிடித்துக்கொண்டு விட்டார்.
ஆகவே, 1917-ஆம் ஆண்டு ஆரம்பத்தில் நாங்கள் கல்கத்தாவிலிருந்து
சம்பாரணுக்குப் புறப்பட்டோம். நாங்கள் இருவரும் நாட்டுப்புற
ஆசாமிகளாகவே தோற்றம் அளித்தோம். அங்கே போக எந்த ரெயிலில் ஏறுவது
என்பது கூட எனக்குத் தெரியாது. அவர் தான் என்னை வண்டிக்கு அழைத்துப்
போனார். இருவரும் சேர்ந்தாற்போலப் பிரயாணம் செய்து காலையில்
பாட்னா போய்ச் சேர்ந்தோம்.
பாட்னாவுக்கு அப்பொழுதுதான் முதல்முறையாக நான்
சென்றேன் அங்கே தங்கலாம் பொருள் : என்றால், எனக்கு நண்பர்களோ,
தெரிந்தவர்களோ யாரும் இல்லை. ராஜ்குமார் சுக்லா சாதாரணக் குடியானவரேயாயினும்
பாட்னாவில் அவருக்குக் கொஞ்சம் செல்வாக்கு இருக்கக்கூடும் என்று
எண்ணினேன். பிரயாணத்தின் போது அவரை இன்னும் கொஞ்சம் திகமாகத்
தெரிந்து கொண்டேன். ஆனால், பாட்னா போய்ச் சேர்ந்ததும் அவரைப்பற்றி
எனக்கு எந்தவிதமான மயக்கமும் இல்லாது போய்விட்டது.அவருக்கு எதைப்பற்றியும்
எதுவுமே தெரியாது. தம் நண்பர்கள் என்று அவர் எண்ணியிருந்த வக்கீல்கள்,
அப்படி ஒன்றும் அவர் நண்பர்கள் அல்ல. ஏழை ராஜ்குமார், அநேகமாக
அவர்களுக்குக் குற்றேவல் செய்பவராகவே இருந்தார். இத்தகைய விவசாயிகளான
குடியானவர்களுக்கும் அவர்களுடைய வக்கீல்களுக்குமிடையே, பிரவாக
சமயத்தில் கங்கை இருப்பதைப் போன்று, அகலமான அகழ் இருந்து வந்தது
என்றே சொல்ல வேண்டும். ராஜ்குமார் சுக்லா, பாட்னாவில் ராஜேந்திர
பாபு வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்றார். அச்சமயம் ராஜேந்திர
பாபு பூரிக்கோ வேறு எங்கோ போய்விட்டார். எங்கே என்பது எனக்கு
நினைவு இல்லை. பங்களாவில் இரண்டொரு வேலைக்காரர்களே இருந்தார்கள்.
அவர்கள் எங்களைத் திரும்பிப் பார்க்கவே இல்லை.
சாப்பிட என் வசம் கொஞ்சம் ஆகாரம் இருந்தது.
பேரீச்சம் பழம் வேண்டும் என்றேன். அவர் கடைக்குப் போய் அதை வாங்கிக்
கொண்டு வந்து கொடுத்தார். தீண்டாமை, பீகாரில் மிகக் கடுமையாக
அனுசரிக்கப்பட்டு வந்தது. கிணற்றிலிருந்து வேலைக்காரர்கள் தண்ணீர்
எடுத்துக் கொண்டிருக்கும்போது நான் தண்ணீர் எடுக்கக்கூடாது என்றனர்.
அப்படி எடுத்தால் என் வாளியிலிருந்து நீர்த் துளிகள் சிதறி,
தாங்கள் தீட்டாகிவிடுவார்கள் என்றனர். ஏனெனில், நான் இன்ன சாதியைச்
சேர்ந்தவன் என்பது அவர்களுக்குத் தெரியாது வீட்டிற்குள்ளிருந்த
கக்கூசுக்குப் போகும்படி குமார் எனக்குக் காட்டினார். ஆனால்,
வேலைக்காரர்களோ, வெளியிலிருந்த கக்கூசுக்குப் போகும்படி கூறிவிட்டனர்.
இத்தகைய அனுபவங்கள் எனக்குப் பழக்கப்பட்டுப் போய்விட்டதால்,
இவைகளைக் கண்டு நான் ஆச்சரியப்படவுமில்லை, கோபமடையவுமில்லை.
தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று ராஜேந்திரப் பிரசாத் விரும்புவார்
என்று அவ்வேலைக்காரர்கள் எண்ணினார்களோ, அந்தக் கடமையை அவர்கள்
செய்தனர். அந்தச் சுவாரஸ்யமான அனுபவங்களினால் ராஜ்குமார் சுக்லாவைக்
குறித்துச் சரியாக நான் தெரிந்துகொள்ள முடிந்தது. அதே சமயத்தில்
அவர்மீது எனக்கிருந்த மதிப்பும் அதிகமாயிற்று. ராஜ்குமாரினால்
எனக்கு வழிகாட்ட முடியாது; லகானை நானே கையில் பிடித்துக்கொள்ள
வேண்டியதுதான் என்பதை இப்பொழுது கண்டுகொண்டேன்.